கூட்ட நெரிசலில் கை பட்டதால் ஆத்திரம்
ஓடும் பஸ்சில் சிறுவனை தாக்கிய பெண் எஸ்.ஐ.
நாகர்கோவில்: குமரி மாவட்டம் மேக்காமண்டபம் அருகே உள்ள செக்காரவிளை பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. கூலி தொழிலாளி. இவரது மனைவி சரோஜா. இவர் இலவச சீருடை தைக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று காலை இதற்கான துணிகளை வாங்குவதற்காக தனது மகன் விஷ்ணுதாசுடன் (13) மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவில் வரும் அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். விஷ்ணுதாஸ், மூலச்சலில் உள்ள ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறான். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. விஷ்ணுதாஸ், பஸ்சின் முன் பகுதியில் நின்று கொண்டு இருந்தான். தக்கலை அருகே பஸ் வரும்போது திடீரென டிரைவர் பிரேக் போட்டார். இதில், நிலை தடுமாறிய சிறுவனுடைய கை அருகில் இருந்த ஒரு பெண் மீது பட்டது. ஆத்திரமடைந்த அந்த பெண், சிறுவனை சரமாரியாக அடித்தார்.
இதை தட்டிக் கேட்ட சரோஜாவிடம் அந்த பெண் நான் யார் தெரியுமா? சப் இன்ஸ்பெக் டர். என்னிடம் பேசினாய் என்றால் தொலைத்து விடுவேன் என்று மிரட்டினார். இதற்கிடையே, பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் சக பயணிகள் சரோஜாவையும், விஷ்ணுதாசையும் அழைத்துக் கொண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். அப்போது பஸ்சில் இருந்து கீழே இறங்கி, அந்த பெண் ஓட முயன்றார். அவரை மற்றொரு பெண் பிடிக்க முயன்ற போது பேக்கில் இருந்து கத்தி போன்ற ஒன்றை எடுத்து திடீரென தனது கையை தானே கிழித்தார். உங்களை கொலை முயற்சி வழக்கில் உள்ளே தள்ளி விடுவேன் என்று கூறி அங்கிருந்து தப்பி விட்டார்.
இதுபற்றி, உடனடியாக நேசமணிநகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் நேசமணிநகர் போலீசார் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பாதிக்கப்பட்ட சிறுவனையும், அவரது தாயாரை மட்டும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று புகார் எழுதி வாங்கினர். முதற்கட்ட விசாரணையில் சிறுவனை அடித்த அந்த பெண், சப் இன்ஸ்பெக்டர் என்பதும், லஞ்ச வழக்கு ஒன்றில் சிக்கி சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருப்பதும் தெரியவந்தது.
No comments:
Write comments